நடராஜனுக்கு கொரோனா வர காரணம் இதுதானா? - விழிபிதுங்கும் பிசிசிஐ
ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதற்கான காரணம் புரியாமல் பிசிசிஐ தவித்து வருகிறது.
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இதனிடையே நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் - டெல்லி அணிகள் மோதின. இதற்காக நேற்று முன்தினம் வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் ஹைதராபாத் அணி வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான நடராஜனுக்கு தொற்று உறுதியானது.
இதனால் தொடர்ந்து அவருடன் நெருக்கமாக இருந்த மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் உட்பட 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. இதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி போட்டி நடைபெற்றது.
கடந்த முறை தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியால் ஐபிஎல் தொடரில் கொரோனா தொற்று ஏற்பட இப்போது மற்றொரு தமிழக வீரரான நடராஜன் மூலம் மீண்டும் ஐபிஎல்லுக்குள் கொரோனா நுழைந்துள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு பிறந்தநாள் பார்ட்டி தான் கொரோனாவுக்கு காரணமாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி நடராஜனின் விளையாடும் ஹைதராபாத் அணியின் சக வீரரான ரஷீத்கானின் பிறந்தநாள் கொண்டாட்டம் சன் ரைசர்ஸ் கேம்ப்பில் கோலாகலமாக அரங்கேறியது. இதற்காக வெளியே இருந்து கேக்குகள் மற்றும் இதர பர்த்டே கொண்டாட்ட பொருட்கள் வாங்கப்பட்டன.
இந்த கொண்டாட்ட வீடியோக்களை சன் ரைசர்ஸ் நிர்வாகமே சமீபத்தில் ட்விட்டரில் வெளியிட்டது. இந்த பிறந்தநாள் விழாவுக்காக நடராஜன் வெளியே எங்கும் சென்றாரா என்ற கோணத்திலும் பிசிசிஐ விசாரணை நடத்தி வருகிறது.