ரொம்ப கஷ்டமா இருக்கு...ஐபிஎல் கோப்பையை தவறவிட்ட சஞ்சு சாம்சன் வேதனை
ராஜஸ்தான் அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுவதாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. அஹமதாபாத் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 39 ரன்கள் எடுக்க, குஜராத் அணியில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை நோக்கி களம் கண்ட குஜராத் அணி 18.1 ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.
இதனிடையே இறுதிப்போட்டி வரை வந்து கோப்பையை தவறவிட்டது வருத்தம் அளிப்பதாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். நேற்றைய நாள் எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. கோப்பையை வென்ற குஜராத் அணிக்கு வாழ்த்துக்கள். எங்கள் வீரர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.