ஐபிஎல் கிரிக்கெட்:6 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூர் அணி
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்தது.
14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 6-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. இன்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர்.
இதில் தேவ்தத் படிக்கல் 3வது ஓவரில் 11 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். விராட் கோலி 4 பவுண்டரிகளை விரட்டி 33 ரன்கள் எடுத்த நிலையில் ஜேசன் ஹோல்டர் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த ஷபாஸ் அகமது(14), டி வில்லியர்ஸ்(1), வாஷிங்டன் சுந்தர்(8) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் க்ளென் மேக்ஸ்வெல் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களை பறக்கவிட்டு அரைசதத்தை கடந்தார்.
ஜேசன் ஹோல்டர் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் க்ளென் மேக்ஸ்வெல்(59) கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 150 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி களமிறங்கியது.
தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும் பாண்டே மற்றும் வார்னர் இருவரும் 83 ரன்கள் பார்ட்னெர்ஷிப் அமைத்தனர். இருந்தபோதும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் பெங்களூரு அணி தனது 2வது வெற்றியும் ஐதராபாத் அணி 2 வது தோல்வியும் தழுவியுள்ளனர்.