சிதறியதை பெருசாக்கிட்டாங்க...கீழே கொட்டப்பட்ட உணவு..ஆர்.பி.உதயகுமார் விளக்கம்
அதிமுக மாநாட்டில் கீழே புளியோதரை அதிகளவில் கொட்டப்பட்டது பெரும் விமர்சனத்தை பெற்ற நிலையில், அதற்கு ஆர்.பி. உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.
வீணான உணவு
கடந்த ஞாயிறு அன்று மதுரையில் நடத்தப்பட்ட அதிமுக மாநாட்டில் வரும் தொண்டர்கள் அனைவர்க்கும் உணவு தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த உணவுகள் மாநாடு முடிந்த பிறகு டன் கணக்கில் கீழே கொட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் செய்திகளாக வெளியாக பெரும் விமர்சனங்களை பெற்று வருகின்றது.
ஆர்.பி.உதயகுமார் விளக்கம்
இந்நிலையில், இது குறித்து திருமங்கலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார் விளக்கமளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த போது, பல பகுதிகளில் இருந்து மாநாட்டு வருகைதந்த அதிமுக தொண்டர்களை காவல்துறையினர் வழிமாற்றிவிட்டதன் காரணமாக 50 லட்சம் பேர் வந்திருக்க வேண்டிய மாநாட்டிற்கு 15 லட்சம் பேரே வந்தனர் என கூறிய அவர், ஒரு கரும்புள்ளியாக உணவு விஷயத்தை வைத்து மகிழ்ச்சி அடைகின்றனர் விமர்சனம் செய்தார்.
10 லட்சம் பேருக்கு சமைக்கப்பட்ட உணவில் அனைவருக்கும் வழங்கப்பட்ட பிறகு, சமையல் பாத்திரங்களை எடுத்துச் செல்லும்போது மிச்சம் மீதியாக ஆங்காங்கே சிதறியிருக்கிற காட்சிகளை எல்லாம் எடுத்துக்காட்டி, மிகைப்படுத்தி ஊடகங்கள் காட்டுவது வேதனையளிக்கிறது என்று அவர் கூறினார்.
ஊடகங்கள் மிகப்படுத்தி இவற்றைக் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்த ஆர்.பி. உதயகுமார், மாநாட்டு வெற்றியை யாராலும் குறை சொல்ல முடியாது என்ற காரணத்தால், புளியோதரை தோல்வியை பேசுவதுதான் இன்றைய நிகழ்வாக பார்க்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.