ATM-ல் பணம் எடுப்பவரா நீங்கள்? செக் வைக்கும் ரிசர்வ் வங்கி
ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
ஏடிஎம் பரிவர்த்தனை
நாட்டில் பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டாலும் இன்னும் சில அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் ரொக்கமாகவே பணத்தை பயன்படுத்துகின்றனர்.
வங்கிக்கு சென்று வரிசையில் நின்று பணம் பெறுவதை விட அருகே உள்ள ஏடிஎம் இயந்திரம் மூலமாகவே பணத்தை பெற விரும்புகிறார்கள்.
ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம்
வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கும் ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதன்படி மாதத்திற்கு 5 முறை இலவசமாக ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியும். அதற்கு மேல் பணம் எடுத்தால் வாடிக்கையாளரிடம் அதிகபட்சமாக ரூ.21 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
பேலன்ஸ் செக் செய்வது போன்ற பணமில்லாத ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கும் 6 ரூபாயும், வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் ஏடிஎம் பரிமாற்றக் கட்டணமாக 17 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
கட்டண உயர்வு
இந்நிலையில் இந்த கட்டணங்களை உயர்த்துமாறு, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையில், 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 21 ரூபாயாக உள்ள கட்டணத்தை ரூ.22 ஆக உயர்த்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், பணமில்லா ஏடிஎம் பரிவர்த்தனைக்கு 6 ரூபாயிலிருந்து 7 ரூபாயாகவும், ஏடிஎம் பரிமாற்றக் கட்டணத்தை 17 ரூபாயிலிருந்து 19 ரூபாயாகவும் உயர்த்த பரிந்துரைத்துள்ளது. இலவச பரிவர்த்தனையை அதிகரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் இந்த பரிந்துரையை ஏற்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணவீக்கம் அதிகரிப்பு, பணத்தை நிரப்புதல் போன்ற செலவுகள் காரணமாக பெருநகரம் அல்லாத பகுதிகளில் ஏடிஎம்களை இயக்குவதற்கான செலவு அதிகரித்துள்ளதாக வங்கிகள் மற்றும் ஒயிட் லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.