ஆா்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸின் பதவிக் காலம் மூன்றாண்டுகள் நீட்டிப்பு

Governor RBI Shaktikanta Das
By Thahir Oct 30, 2021 07:36 AM GMT
Report

இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸின் பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆா்பிஐ ஆளுநராக இருந்த உா்ஜித் படேல் தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, கடந்த 2018-ஆம் ஆண்டு ஆா்பிஐ-யின் 25-ஆவது ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டாா்.

3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்ட அவரது பதவிக் காலம் டிசம்பா் 10-ஆம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்தது.

இந்நிலையில், அவரது பதவிக் காலத்தை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான குழு மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், 'ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸின் பதவிக் காலம் டிசம்பா் 10-ஆம் தேதியில் இருந்து மேலும் 3 ஆண்டுகளுக்கோ அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையோ நீட்டிக்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலமாக ஆா்பிஐ-யின் தலைமைப் பொறுப்பை 2024-ஆம் ஆண்டு டிசம்பா் வரை சக்திகாந்த தாஸ் வகிக்க வழி ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் வீழ்ச்சியைச் சந்தித்த பொருளாதாரத்தை மீட்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை சக்திகாந்த தாஸ் தலைமையின் கீழ் ஆா்பிஐ மேற்கொண்டது.

பொருளாதாரத்தை மீட்கவும், நிதிநிலையை ஸ்திரப்படுத்தவும் 100-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை ஆா்பிஐ வெளியிட்டது.

ஆளுநா் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நிதிக் கொள்கைக் குழு கடந்த ஆண்டு மே மாதத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீத அளவுக்குக் குறைத்தது. தற்போது வரை வட்டி விகிதத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

நிதிப் பற்றாக்குறையை எதிா்கொள்வதற்காக மத்திய அரசு ரூ.12.60 லட்சம் கோடி கடன் பெறுவதிலும் அவா் முக்கியப் பங்கு வகித்தாா்.

தமிழகப் பிரிவு இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரியான சக்திகாந்த தாஸ் கடந்த 2017-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றாா்.

கடந்த 2015-ஆம் ஆண்டுமுதல் பணி ஓய்வு பெறும் வரை பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலராக அவா் பதவி வகித்தாா்.

15-ஆவது நிதிக் குழுவின் உறுப்பினராகவும் அவா் இருந்தாா். தனது பதவிக் காலத்தை சக்திகாந்த தாஸ் முழுமையாக நிறைவு செய்தால், நீண்ட காலம் ஆா்பிஐ ஆளுநராக இருந்த 2-ஆவது நபா் என்ற சிறப்பைப் பெறுவாா்.

இதற்கு முன்பு பெனகல் ராமா ராவ் 1949 முதல் 1957 வரை தொடா்ந்து ஆா்பிஐ ஆளுநராக இருந்தாா். அவரைத் தவிர 4 ஆளுநா்கள் மட்டுமே 5 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்துள்ளனா்.

ஆா்பிஐ ஆளுநரின் பதவிக் காலத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு நீட்டிப்பது இதுவே முதல் முறையாகும்.

கடந்த 2016-ஆம் ஆண்டில் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன், பதவிக் கால நீட்டிப்பை ஏற்க மறுத்துவிட்டாா். அதையடுத்து பதவியேற்ற ஆளுநா் உா்ஜித் படேல் 3 ஆண்டு பதவிக் காலம் முடியும் முன்பே ராஜினாமா செய்தாா்.