திருப்பதி உண்டியலில் ரூ.100 கோடியை திருடினேன் - ஊழியர் திடுக் வாக்குமூலம்!
தேவஸ்தான முன்னாள் ஊழியர் ஒருவர், தானே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டு வெளியிட்டுள்ள வீடியோ வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
100 கோடி திருட்டு
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணத்தை எண்ணும் இடம் 'பரகாமணி' என்று அழைக்கப்படுகிறது. இந்த துறையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தவர் ரவிக்குமார்.

இவர் தேவஸ்தானத்தின் முன்னாள் ஊழியர். இவர் தனது பணிக்காலத்தில் சிறுக சிறுக உண்டியல் பணத்தை கையாடல் செய்து, சுமார் 100 கோடி ரூபாய் வரை திருடியதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையின் பிடியில் சிக்கிய ரவிக்குமார், தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணீர் மல்க பேசியுள்ள அவர், "திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கையில் 100 கோடி ரூபாயை நான் திருடியது உண்மை தான். செய்யக்கூடாத ஒரு மாபெரும் துரோகத்தை செய்துவிட்டேன்.
ஊழியர் வாக்குமூலம்
என் மனசாட்சி என்னை உறுத்தியதால், என் தவறை முழுமையாக உணர்ந்து கொண்டேன்," என்று தெரிவித்துள்ளார். மேலும், செய்யக்கூடாத ஒரு தவறைச் செய்ததை உணர்ந்து, முழு மனதுடன் சுவாமிக்கு சொத்தை எழுதிக் கொடுத்ததாக ரவிக்குமார் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் வேறு சிலருக்கு தாம் பணம் கொடுத்ததாகவும், பணத்தைத் திருட அறுவை சிகிச்சை செய்ததாகவும் கூறப்படுவது தவறான தகவல் என்றும் ரவிக்குமார் விளக்கம் தந்துள்ளார். இவரது இந்த நேரடி வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தேவஸ்தான நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.