"வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியின் கேப்டனாக இருப்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை" - பும்ராவின் கேப்டனாகும் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவி சாஸ்திரி

captaincy talks ravi shastri jasprit bhumra
By Swetha Subash Jan 29, 2022 06:31 AM GMT
Report

இந்திய அணியின் கேப்டனாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் இருப்பது மிகவும் கடினம் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்திருக்கிறார்.

விராட் கோலி மூன்றுவித போட்டிகளில் இருந்தும் தனது கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டார்.

இதனால் டெஸ்ட் போட்டிகளுக்கு யார் அடுத்த கேப்டனாக பொறுப்பேற்க வேண்டும் என்ற கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறது.

ரோகித் சர்மாவிற்கு ஏற்கனவே லிமிடெட் ஓவர் போட்டிகளில் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டதால் கூடுதலாக பொறுப்பு கொடுத்தால் வேலைப்பளு அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.

இதனால் கே.எல். ராகுலை கேப்டனாக முன்னிறுத்த வேண்டும் என்று சிலர் தெரிவித்தனர் ஆனால் கே.எல். ராகுலுக்கு கேப்டன் பொறுப்பேற்று அணியை வழிநடத்துவதற்கான போதிய அனுபவம் இன்னும் வரவில்லை.

இந்நிலையில் அணியை வழிநடத்த கூடிய திறமை படைத்த வேறு யாராவது ஒருவர் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருதுகின்றனர்.

அந்த வகையில் ஜஸ்பிரித் பும்ராவிடம் டெஸ்ட் தொடர் கேப்டனாக இருப்பது குறித்து கேட்கும்பொழுது கேப்டன் பதவி கிடைத்தால் அதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்வேன் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பும்ராவின் இந்த பதில் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மீண்டும் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது.

பும்ராவின் இந்த கருத்து குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அதில் அவர்,

“ஒரு வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியின் கேப்டனாக இருப்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை, ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக இருக்க வேண்டும் என்றால் அவருக்கு ஆல்ரவுண்டர் திறமையும் இருக்க வேண்டும்,

பந்துவீச்சாளராக இருந்தாலும் மைதானத்தில் எப்பொழுதும் ஆக்ரோஷமாகவே இருக்க வேண்டும் இதனால் ஒரு வேகப்பந்து வீச்சாளர் அணியை வழிநடத்துவது என்பது மிகவும் கடினம்.

கபில்தேவ், இம்ரான் போன்று ஒரு ஆல்ரவுண்டராக இருந்தால் அணியை வழி நடத்தலாம்” என்று ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.