தங்கம் வெல்வாரா ரவிக்குமார் தாஹியா? - பரபரக்கும் இறுதிப் போட்டியில் இன்று மோதல்
டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆடவர் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் ஜாவூர் உகுவேயை எதிர்கொள்கிறார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.
இதனிடையே இந்தியாவுக்கு 4வது பதக்கத்தை உறுதி செய்யும் வகையில் நேற்று காலை நடந்த மல்யுத்த போட்டியில் 57 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் களமிறங்கிய ரவிகுமார் தாஹியா முதல் சுற்றில் கொலம்பியாவின் ஆஸ்கர் டைகரோசை 13-2 என்ற புள்ளிக் கணக்கில் அதிரடியாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
அடுத்து நடைபெற்ற காலிறுதியில் பல்கேரிய வீரர் வாலன்டினோவ் ஜியார்ஜியையும் 14-4 என்ற கணக்கில் வீழ்த்தினார். தொடர்ந்து மாலையில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் கஜகிஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனயேவை ஃபால் முறையில் தோற்கடித்தார்.
இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரவிக்குமார் தாஹியா இந்தியாவின் சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முதல் ஆண் வீரர் என்கிற பெருமையை பெறுகிறார். அது தங்கமா, வெள்ளியா என்பது இன்று மாலை நடக்கும் இறுதிப்போட்டியில் தெரியும். ஏற்கனவே இவர் 2019, 2020 என அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.