“கடிச்சதுக்கு சாரி” - இந்திய வீரரிடம் மன்னிப்பு கேட்ட கஜகஸ்தான் வீரர்
மல்யுத்தப் போட்டியில் தன்னை கடித்த கஜகஸ்தான் வீரர் மன்னிப்பு கேட்டார் என்று டோக்கியோ இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஆடவர் 57 கிலோ மல்யுத்த பிரிவு அரையிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனயேவுடன் இந்திய வீரர் தாஹியா மோதினார். இந்த போட்டியில் தாஹியா கடுமையாக போராடி வென்றார். இதன் ஒரு தருணத்தில் ரவிக்குமாரின் கையை நூரிஸ்லாம் கடித்து விட்டார்.
இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ரவிக்குமார் தாஹியா, இரு வீரர்கள் மோதிக்கொள்ளும் போட்டியின்போது இப்படி நிகழ்வது எல்லாம் சாதாரண விஷயம்தான். அவர் என்னை கடித்த விஷயத்தை அந்த அரங்கிலேயே நான் மறந்துவிட்டேன் என கூறியுள்ளார்.
மேலும் மறுநாள் பயிற்சிக்கு சென்றபோது அங்கே இருந்த நூரிஸ்லாம் தன்னை கட்டிப்பிடித்து ‘மன்னித்துவிடு சகோதரா’ என கூறியதாக ரவிக்குமார் தாஹியா தெரிவித்துள்ளார்.