ரேஷன் கடைகளுக்கு 12 நாட்கள் விடுமுறை
ஆங்கிலப் புத்தாண்டு 2022 இன்று பிறந்துள்ளது. பலரும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எல்லா வளமும் பெற்று பேரிடர்கள் நம்மை தாக்காத வண்ணம் இனிய ஆண்டாக அமைய பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர்.
இந்த சூழலில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் ரேஷன் கடைகளுக்கு எந்தெந்த நாட்களில் பொது விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த வேண்டியது ஊடகங்களின் கடமையாகும்.
அந்த வகையில் நடப்பாண்டு மட்டும் ரேஷன் கடைகளுக்கு 12 நாட்கள் பொது விடுமுறை ஆகும்.
அதாவது, ஜனவரி 14 - வெள்ளி - பொங்கல் பண்டிகை ஜனவரி 18 - செவ்வாய் - தைப்பூசம் ஜனவரி 26 - புதன் - குடியரசு தினம் ஏப்ரல் 14 - வியாழன் - தமிழ்ப்புத்தாண்டு மே 1 - ஞாயிறு - மே தினம் மே 5 - வியாழன் - ரம்ஜான் ஆகஸ்ட் 15 - திங்கள் - சுதந்திர தினம் ஆகஸ்ட் 31 - புதன் - விநாயகர் சதுர்த்தி அக்டோபர் 2 - ஞாயிறு - காந்தி ஜெயந்தி அக்டோபர் 10 - திங்கள் - விஜயதசமி அக்டோபர் 24 - திங்கள் - தீபாவளி டிசம்பர் 25 - ஞாயிறு - கிறிஸ்துமஸ் ஆகிய நாட்களில் பொது விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர வார விடுமுறையும் விடப்படுகிறது. எனவே வேலை நாட்களை அறிந்து அதற்கேற்ப அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 39 மாவட்டங்களில் உள்ள 314 வட்டங்களில் 34,773 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மொத்தம் 2.19 கோடி குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் 6.87 கோடி பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். இதையொட்டி 6.81 கோடி ஆதார் பதிவுகளும், 2.19 கோடி கைபேசி பதிவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.
குடும்ப அட்டைகளுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஐந்து வகையான குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அதாவது, முன்னுரிமை குடும்ப அட்டை (PHH)க்கு அனைத்து பொருட்களும் கிடைக்கும். முன்னுரிமை குடும்ப அட்டை அந்தியோதயா அன்ன யோஜனா (PHH-AYY)க்கு 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
முன்னுரிமையற்ற குடும்ப அட்டை (அரிசி அட்டை) (NPHH)க்கு அனைத்து பொருட்களும் வழங்கப்படும். முன்னுரிமையற்ற குடும்ப அட்டை (சர்க்கரை அட்டை) (NPHH-S)க்கு அரிசி தவிர மற்ற அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
பொருட்களில்லா அட்டை (NPHH-NC)க்கு எந்தவொரு பொருட்களும் கிடைக்காது. இதனை அடையாள ஆவணமாக மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.