“11 நிமிடம் மட்டுமே பாலியல் உறவு வைத்ததால் தண்டனை குறைப்பு” - அதிரவைத்த நீதிமன்ற தீர்ப்பு
கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 நிமிடம் மட்டுமே குற்றவாளி தவறு செய்தார் என்பதால் அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நீதிபதி ஒருவர் குறைத்திருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்விட்சர்லாந்து நாட்டின் பசல் நகரில் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 33 வயதாகும் பெண் ஒருவரை அவரின் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வைத்தே இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவரில் ஒருவருக்கு 17 வயது என்பதால் அவர் மீதான வழக்கை சிறார் நீதிமன்றம் தனியாக விசாரித்து வருகிறது.
மற்றொரு குற்றவாளியான போர்சுக்கலைச் சேர்ந்த 32 வயது இளைஞர் மீதான வழக்கை விசாரித்த பெண் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதோடு அங்கு போராட்டத்துக்கும் வழிவகை செய்துள்ளது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி குற்றவாளி அந்த பெண்ணை 11 நிமிடம் மட்டுமே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் இரவு விடுதியில் வைத்து முன்னதாகவே அந்த இளைஞருக்கு சில சமிஞ்ஞைகளை கொடுத்திருக்கிறார். எனவே குறைந்த நேரம் குற்றம் நடந்திருப்பதாலும், ஸ்விஸ் சட்டதிட்டங்களுக்கு இணங்க அந்த நபருக்கான தண்டனையை குறைப்பதாக தீர்ப்பளித்துள்ளார்.
இதன் மூலம் குற்றவாளியின் தண்டனை 51 மாதங்களில் இருந்து 36 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குற்றவாளி சிறை தண்டனை அனுபவித்து வருவதால் அவர் விரைவிலேயே விடுதலை ஆகக் கூடும் என கூறப்படுகிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து நூற்றுக்கணக்கான பெண்கள் பசல் நீதிமன்றத்தின் முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.