"மத்திய பட்ஜெட் - இந்தியாவின் சம்பளம் பெறும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு செய்யும் துரோகம்" - காங்கிரஸ் கருத்து
2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்ற மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் பட்ஜெட் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா கருத்து தெரிவித்துள்ளார்.
“மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டின் சம்பளக்காரர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினருக்கான எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல் துரோகம் இழைத்துள்ளனர்.
ஊதியக் குறைப்பு மற்றும் உயர் பணவீக்கம் காரணமாக சம்பளம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முழு ஊதியக் குறைப்பு மற்றும் பணவீக்கத்தை முறியடிக்க சம்பளம் வாங்குவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
பிரதமரும், மத்திய நிதி அமைச்சரும் தங்கள் நடவடிக்கைள் மூலம் அவர்களை மீண்டும் ஏமாற்றியுள்ளனர். இது இந்தியாவின் சம்பளம் பெறும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு செய்யும் துரோகம்” என ரந்தீப் சுர்ஜேவாலா குறிப்பிட்டுள்ளார்.