சூதாட்ட விவகாரம்...ரன்பீர் கபூருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை...அதிர்ந்த பாலிவுட்
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு சூதாட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இது பாலிவுட் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
ரன்பீர் கபூர்
வாரிசு நடிகர்களுக்கு பேர் போன பாலிவுட்டில் அந்த வரிசையில் அறிமுகமான நடிகர் ரன்பீர் கபூர் தனது தனித்துவமான நடிப்பு, நடனம் போன்றவற்றின் காரணமாக பெரும் திரளான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்ததை அடுத்து அவர் தற்போது அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடித்து வருகின்றார்.
அனிமல் என பெயரிடபட்டுள்ள இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா, பிரபல பாலிவுட் நடிகர் அணில் கபூர் போன்றோரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் டீஸர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இன்று அமலாக்கத்துறை ரன்பீர் கபூருக்கு சம்மன் அனுப்பியிருப்பது பெரும் சலசலப்பை பாலிவுட்டில் ஏற்படுத்தி இருக்கின்றது.
சூதாட்ட விளம்பர பிரச்சனை
சமீபத்தில் சூதாட்ட மொபைல் ஆப் நிர்வாகம் ஒன்று பணமோசடி செய்தது தொடர்பாக, அமலாக்கப் பிரிவு மும்பை, டெல்லி உட்பட நாட்டின் பல இடங்களில் சோதனை நடத்தியது. சவுரப் சந்திராகர் நடத்தி வரும் இந்த சூதாட்ட மொபைல் ஆப்பை துபாயில் உருவாக்கி, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
தனது திருமணத்திற்கு சவுரப் சந்திராகர் பணம் ஹவாலா முறையில் செலவு செய்ததாக கூறப்படும் நிலையில், இந்த மொபைல் ஆப் தொடர்பாக நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருக்கிறது. இந்த ஆப்பின் விளம்பரத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். அதற்காக அவருக்குப் பணம் எப்படி கொடுக்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரணைக்காக 6-ம் தேதி ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.