தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினின் ரமலான் வாழ்த்து செய்தி
இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அறம் பிறழா மனித வாழ்வை வலியுறுத்தும் ரமலான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு உளம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒரு மாத காலம் கடுமையான நோன்பிருந்து பசித்துன்பம் என்பதை அனுபவத்தால் உணர்ந்து, ஏழை எளியோர் பால் இரக்கம் கொண்டு, ஈகைப்பண்பு சிறக்க ரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள்.
”எனது கல்லறையை அலங்காரம் செய்யாதீர்கள், என்னை இறைவனாக ஆக்கி விடாதீர்கள், எனக்கு முன்னாள் வாழ்ந்த நபிமார்களை அப்படி ஆக்கிவிட்டார்கள். உலர்ந்த ரொட்டித் துண்டுகளையும், காய்ந்த பேரீச்சம் பழங்களையும் உண்டு வாழ்ந்த ஓர் ஏழைப் பெண்ணின் மகன் என்று கூறுவதில் நான் பெருமையடைகிறே்ன்” என்று தன் அன்பர்களுக்கு கூறியவர் அண்ணல் நபிகள் பெருமாள்.
பொய்மை, ஆடம்பரம் இவற்றை தவிர்த்து எளிமை, அன்பு, அடக்கம் இவற்றை குணநலன்களாக கொள்ள வழிகாட்டிய கருணை வள்ளல் அவர். பசித்தோருக்கு உணவிடவும், சமத்துவ, சகோதரத்துவ உணர்வுடன் அனைவரையும் நேசிக்கவும் வழிகாட்டிய பெருமகனார்.
”தொழிலாளரின் வியர்வை உலரும் முன் அவன் கூலியை கொடுத்துவிடு” என்று உழைப்பை மதிப்பிடும் உத்தம பண்பை உலகுக்கு நீதியாய் போதித்தவர்.
மனித வாழ்வு மேனமை அடைவதற்காக இத்தகைய மார்க்கங்களை போதிப்பதால் தான் நபிகள் நாயகத்தை மக்கள் போற்றுகிறார்கள்.
அத்தகைய நபிகள் பெருமகனார் போதித்த நெறியில் வாழ்ந்து, நோன்பு கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு ரமலான் திருநாளை கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையிலும், முதலமைச்சர் என்ற பொறுப்பிலும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரிதாக்கி மகிழ்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.