"ஒரு தெய்வீக குரல் இப்போது நிரந்தர அமைதியாகிவிட்டது" - பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்
இந்தி திரையுலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது.
தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
அவரின் உயிரிழப்பு இந்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
‘லதா மங்கேஷ்கரின் மறைவு குறித்த செய்தி, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளதைப் போலவே எனது இதயத்தையும் நொறுக்கிவிட்டது.
அவரது பாடல்கள் உணர்வுகளை வெளிப்படுத்தின. அவரது சாதனைகள் ஒப்பிட முடியாதவை. ஒரு தெய்வீக குரல் இப்போது நிரந்தர அமைதியாகிவிட்டது.
ஆனால் அவருடைய மெல்லிசைகள் என்றைக்கும் அழியாமல் இருக்கும். அவரது குடும்பத்தினருக்கும், உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது அனுதாபங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.