மதுரை முன்னாள் எம்.பி. ராம்பாபு உயிரிழந்தார்
மதுரையின் முன்னாள் எம்.பி., ஏ.ஜி.எஸ். ராம்பாபு (60) உடல்நலக் குறைவால் நேற்று இரவு உயிரிழந்தார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரையில் 1989 - 1991 மற்றும் 1991 - 1996 வரை எம்.பி.யாக இருந்தவர் ராம்பாபு. தமிழ் மாநில காங்., சார்பில் போட்டியிட்டு 1996ம் ஆண்டு 3வது முறையாக எம்.பி.யாக வெற்றி பெற்றார்.
ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளரான இவர் கட்சியின் மாநில பொதுச் செயலராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், உடல் நலமின்றி 2 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வந்த அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், மருத்துவ சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். ராம்பாபுவின் தந்தை ஏ.ஜி.சுப்பராமனும் மதுரை எம்.பி.,யாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.