ராமஜெயம் கொலை வழக்கு; விசாரிக்கப்பட்ட நபர் கொடூரக் கொலை - பரபரப்பு!
ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை வளையத்தில் இருந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ராமஜெயம் கொலை
திருச்சி, ஆஃபீஸர்ஸ் காலனி பகுதியில் வசித்து வந்தவர் பிரபு என்கிற பிரபாகரன்( 51). இவர், ஆம்புலன்ஸ் வாகனத்தை வாடகைக்கு கொடுப்பது,

ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை பணிக்கு அனுப்புவது ஆகிய தொழில்களை செய்து வந்தார். மேலும், இவர் மீது காவல் நிலையங்களில் கொலை, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பரபரப்பு சம்பவம்
இந்நிலையில், அரசு மருத்துவமனை எதிரே உள்ள தன்னுடைய அலுவலகமான ஸ்ரீ தாயார் ஹோம் கேர் சர்வீஸ் ஆபிஸில் இருந்துள்ளார். அப்போது, அவர் அலுவலகத்திற்குள் பட்டாகத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன், முகமூடி அணிந்தபடி நுழைந்த 3 பேர் கொண்ட கும்பல் பிரபுவை சரமாரியாக தலையில் வெட்டி உள்ளனர்.

இதில் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே, உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்த போலீஸார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் உள்ள காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை வளையத்திற்குள் பிரபு இருந்துவந்ததாக கூறப்படுகிறது. பாமக கட்சியில் மாவட்ட பொறுப்பில் இருந்த அவரை சமீபத்தில்தான் அந்த கட்சி தலைமை கட்சியை விட்டு நீக்கியது குறிப்பிடத்தக்கது.
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan