பாமகவிற்கு புதிய பொதுச்செயலாளர் - வடிவேல் ராவணனை நீக்கி அதிரடி காட்டும் ராமதாஸ்
பாமகவின் பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணனை நீக்கிவிட்டு, புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாமக உட்கட்சி மோதல்
பாமகவில் கடந்த சில மாதங்களாகவே அதன் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
முன்னதாக அன்புமணி மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கி செயல்தலைவராக நியமித்தார்.
ராமதாசின் இந்த முடிவிற்கு பாமக பொருளாளர் திலக பாமா, கட்சியில் ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளதாக அன்புமணிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
திலக பாமா பதவி விலக வேண்டும் என பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் அறிக்கை மூலம் பதிலடி கொடுத்தார்.
புதிய பொதுச்செயலாளர்
இதனையடுத்து, சில நாட்களில் திலக பாமா மற்றும் வடிவேல் ராவணன் அன்புமணி ராமதாசை சந்தித்து பேசினார்.
அன்புமணி ராமதாஸ் நடத்திய ஆலோசனை கூட்டங்களில் வடிவேல் ராவணன் கலந்து கொள்ள தொடங்கினார்.
இதனையடுத்து, தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ் வடிவேல் ராவணனை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.500 பரிசு என கிண்டல் செய்தார்.
இந்நிலையில், பாமக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் ராவணன் நீக்கப்பட்டதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். முரளி சங்கர் என்பவர் பாமகவின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.