பாஜக கூட்டணிக்காக காலை பிடித்தார்; அன்புமணி தாயை தாக்க முயன்றார் - கண்கலங்கிய ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ராமதாஸ் - அன்புமணி மோதல்
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், பாமக தலைவர் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து மோதல் நிலவி வந்தது.
இதனையடுத்து, இனி நானே பாமக தலைவராக செயல்படுவேன், என கூறி விட்டு அன்புமணியின் தலைவர் பதவியை பறித்து விட்டு, அவரை செயல் தலைவராக நியமித்தார்.
இதனையடுத்து, தருமபுரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். நான் என்ன தவறு செய்தேன்? பாமக தலைவர் பதவியில் இருந்து எதற்கு என்னை மாற்றினார்கள் என தெரியவில்லை.
என் கனவு, இலட்சியம் எல்லாமே, அய்யா என்ன நினைத்தாரோ அதைத்தான் நிறைவேற்றினேன். இனியும் ஒரு மகனாக அய்யா என்ன நினைக்கின்றாரோ அதைதான் நிறைவேற்றுவேன்" என பேசியிருந்தார்.
மத்திய அமைச்சராக்கியது தவறு
இந்நிலையில் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீதுபல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதில் பேசிய அவர், "தர்மபுரியில் ஒரு கூட்டத்தில் அன்புமணி பேசியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நானும் பார்த்தேன். நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் பதவி நீக்கம்? என்றும் அன்புமணி பேசி இருந்தார். இது முழுக்க முழுக்க மக்களையும், கட்சிக்காரர்களையும் திசை திருப்பும் முயற்சியாகும்.
தவறு செய்தது அன்புமணி இல்லை. அன்புமணியை 35 வயதில் எனது சத்தியத்தையும் மீறி மத்திய அமைச்சராக்கி தவறு செய்துவிட்டேன்.
மேடை நாகரிகம் இல்லை
மேடை நாகரிகமும், சபை நாகரிகமும் இல்லாமல் செயல்படுகிறார் அன்புமணி. முகுந்தனை இளைஞர் அணி செயலாளர் என நியமனம் செய்தேன். உடனே மேடையிலேயே மறுப்பு தெரிவித்தது சரியா?
மைக்கை தூக்கி என் தலையில் போடாத குறையாக வீசியது, நான்கு சுவற்றுக்குள் பேசி முடிக்க வேண்டியதை நடு வீதிக்கு கொண்டு வந்தது யார்? உயர்ந்த ஆளுயர கண்ணாடி போல் இருந்த கட்சியை போட்டு உடைத்தது யார்?
45 ஆண்டுகள் இந்த கட்சியை கடமை, கன்னியம், கட்டுப்பாடோடு கட்சியை நடத்தி வந்தேன். அதற்கு அன்புமணி கலங்கம் ஏற்படுத்திவிட்டார். ஜிகே மணி மகன் தமிழ்க்குமரனை கட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்த நினைத்தேன். ஆனால் அன்புமணி அதை நிராகரித்தார்.
கட்சி பிரச்சனைகள் பற்றி பேசியபோது அவரது அம்மாவின் மீதே பாட்டிலை வீசி ஏறிந்தார். நல்லவேளை பாட்டில் அவர்மீது படவில்லை.
அதிமுக கூட்டணி
என்னை விமர்சியுங்கள் என கட்சிக்காரர்களிடம் கூறுவேன், கடிதம் எழுத சொல்வேன். அப்படியெல்லாம் கட்சியை வளர்த்தேன். 95 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று வந்த கால்கள் என் கால்கள். காடு, மேடு, வரப்பு என வளர்த்த கட்சி.
தகப்பனிடம் தோற்பது என்பது மானக்கேடு இல்லை. எப்படி இருந்தாலும் கட்சி உங்களிடம் தான் வரும். அன்புமணி தான் தவறான ஆட்டத்தைத் தொடங்கினார்.மாவீரன் குருவை கீழ்தரமாக நடத்திய விதம் எற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.
நாடாளுமன்ற தேர்தலில் அன்புமணி அதிமுக கூட்டணி வேண்டும் என கூறினார். நான் அதிமுக கூட்டணிவேண்டாம் என கூறினேன். பாஜக கூட்டணிக்காக எனது காலைப் பிடித்தார்.பாமக அதிமுக கூட்டணி அமைந்திருந்தால் சில தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம் என ராமதாஸ் கண் கலங்கி பேசினார்.