வானில் பிறை தென்படாததால் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிப்பு..!
வானில் நேற்று பிறை தென்பாடாததால் தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
ரமலான் நோன்பு
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான். 30 நாட்கள் தண்ணீர் கூட குடிக்காமல் பகல் முழுதும் நோன்பு வைத்து இரவில் இறைவனுக்கு நன்றி செலுத்தும் மாதமாக இந்த ரமலான் மாதம் பார்க்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் பிறையை பார்த்து ரமலான் மாதத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.
இதையடுத்து நேற்று ஷபான் மாதம் முடிவையும், ரமலான் மாத பிறையை நேற்று இஸ்லாமியர்கள் வானில் தேடிய போது பிறை தென்படவில்லை.
தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் ரமலான் மாதம் கடைப்பிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை முதல் நோன்பு
இதுகுறித்து,தமிழ்நாடு அரசு தலைமை காஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்," ஹிஜ்ரி 1444 ஷாபான் மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 22-03-2023 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 24-03-2023 தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஷபே கத்ர் 18-04-2023 செவ்வாய்க்கிழமை மற்றும் 19-04-2023 புதன்கிழமை ஆகிய இரு நாட்களின் மத்தியிலுள்ள இரவில் ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.