ரம்ஜான் பண்டிகையின் போது நடக்கவிருந்த சிபிஎஸ்இ தேர்வுகளின் தேதி மாற்றம்
ரம்ஜான் பண்டிகையில் நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வருடமாக கொரோனா பாதிப்பால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில், தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, கொரோனா விதி முறைகளை கையாண்டு பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து, சிபிஎஸ்சி நடப்பு கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்டார்.
அந்த அட்டவணையில் மே 13,15 தேதிகளில் தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் பிறை தெரிய வாய்ப்பு இருப்பதால் அதனை சுட்டிக்காட்டி எம்.பி சு.வெங்கடேசன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடந்த மாதம் கடிதம் எழுதியிருந்தார்.

அக்கடிதத்தில் சிபிஎஸ்சி தேர்வானது ரம்ஜான் திருநாள் அன்று நடப்பதால் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து, சிபிஎஸ்இ தேர்வுகளின் தேதியை மாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையின் போது நடைபெற இருந்த தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டிருப்பதாக சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.