ராஜீவ்காந்தி கொலை வழக்கு- ஆளுநரை சந்தித்தார் தமிழக முதல்வர்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்திருக்கிறார். 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுத்து கொள்ளலாம் என தெரிவித்தது. ஒரு வார காலத்தில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவகாசம் கொடுத்துள்ளது. நேற்றோடு ஒரு வாரம் கால அவகாசம் முடிவடைந்தது.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்தார். 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். அவர் மறைவை தொடர்ந்து சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, ஆளுநரை சந்தித்த முதல்வர் 7 பேர் விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநரை கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் இது தொடர்பான கோரிக்கை அடங்கிய கடிதத்தை அவர் ஆளுநரிடம் வழங்கியுள்ளார். இன்றோ அல்லது நாளையோ 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.