திமுகவில் இணைகிறாரா? ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் கே.வி.எஸ் சீனிவாசன்!
ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்து விலகிய கே.வி.எஸ்.சீனிவாசன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று சென்னை திரும்பி வந்ததும் மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடப்பட்டது. அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்ட பிறகு நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடனான முதல் சந்திப்பு நேற்று நடந்தது.
ரஜினி மக்கள் மன்றத்தின் 38 மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.சென்னையில் உள்ள கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வருகை தருமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், என்னை வாழவைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன,நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதனை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.
நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் ஆக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல உதவிகளையும், பல சாதனைகளையும் உருவாக்கினோம்.
கால சூழலால் நம் எண்ணம் சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபட போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு சார்ந்த பணிகள் எதுவும் இன்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நல பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்து கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள்! வாழ்க தமிழ்நாடு! ஜெய்ஹிந்த் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது தீவிர ரசிகரும் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளருமான கே.வி.எஸ் சீனிவாசன் நேற்று ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.அதனையடுத்து அவர் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.
ஐபிசி தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர் ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர்,அவர் இன்னும் நுாறாண்டு வாழ வேண்டும்.நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.மேலும் நான் ரஜினிகாந்த் அவர்களை ”விலகி செல்லவில்லை விட்டுச் செல்கிறேன்” என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து தான் முழுமையாக ரஜினியை விட்டுசெல்லவில்லை, விலகிதான் செல்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் அவர் விரைவில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.