எல்லாத்துக்கும் உங்க மாமனார் ரஜினி தான் காரணம் - இளையராஜா பேச்சால் ஷாக்கான தனுஷ்
இசைஞானி இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நீண்ட இடைவெளிக்குப் பின் சென்னையில் நடைபெற்றது.
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மீண்டும் நடக்க தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அந்த வகையில் இசைஞானி இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நீண்ட இடைவெளிக்குப் பின் சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது.
இந்த இசை நிகழ்ச்சிக்காக சென்னையில் இன்று மாலை 4 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட நிலையில் டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நடைபெற்றது. ராக் வித் ராஜா என பெயரிடப்பட்ட இந்நிகழ்ச்சி முதல் பாடலாக ஸ்ரீ ராகவேந்திரா திரைப்படத்தில் வரும் ஜனனி ஜனனி பாடலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மனோ மற்றும் எஸ்.பி.சரண் இருவரும் இணைந்து இளையராஜாவின் ஆல்டைம் பேவரைட் பாடலான இளமை இதோ இதோ பாடலை பாடி அசத்தினர்.
அதற்கு அடுத்தப்படியாக வள்ளி திரைப்படத்தில் வரும் மெலோடி பாடலான என்னுள்ளே என்னுள்ளே பாடலை மகாராஷ்டிரா பாடகி விபவரி பாடினார். ரசிகர்கள் இந்த பாடலை கேட்டு அப்படியே இருக்கையில் மெய்மறந்து போனார்கள். படத்தில் இடம் பெற்றுள்ள இந்த பாடலை வாலியின் வரிகளில் சொர்ணலதா பாடி இருந்தார்.
இந்த பாடல் முடிந்தவுடன் தனுசை எழுந்திருக்கும் படி கூறியதுடன் உனக்கு இந்த பாட்டு பிடிச்சிருக்கா என்று இளையராஜா கேட்டார். தனுஷ் ஆமாம் என்று சொல்ல இந்த பாடலின் மகத்தான வெற்றிக்கு உங்க மாமனார் ரஜினி தான் காரணம் என்று கூறினார். இதைக்கேட்ட தனுஷ் மௌனமாக சிரித்துவிட்டு தலை ஆட்டியபடி அமைதியாய அமர்ந்தார்.