“வதந்திகளை நம்ப வேண்டாம்” - ரஜினி நலமுடன் இருப்பதாக ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தகவல்
நடிகர் ரஜினிகாந்த் நலமாக இருப்பதாக அவரது ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தீபாவளி வெளியிடாக நவம்பர் 4 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதால் ரஜினி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதனிடையே ரஜினியின் திரையுலக சாதனைகளை பாராட்டி சில தினங்களுக்கு முன் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. அன்றைய தினம் தனது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கியுள்ள ஹூட் என்ற செயலியை அவர் அறிமுகப்படுத்தியிருந்தார்.
தலைவர் நலமாக இருக்கின்றார் , வதந்திகளை நம்பவேண்டம்
— Sudhakar (@SudhakarVM) October 28, 2021
இதனிடையே இன்றைய தினம் தனது குடும்பத்தினருடன் அண்ணாத்த படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படத்தைப் பார்த்துவிட்டு தனது இளைய பேரன் வேத் கிருஷ்ணா அடைந்த மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மனைவி லதா ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இதனிடையே ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “தலைவர் நலமாக இருக்கின்றார், வதந்திகளை நம்பவேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.