நேர்மைக்கு பாராட்டு: பத்மாவுக்கு தங்க சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த்
தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மையை பாராட்டும் விதத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு தங்க சங்கிலியொன்றை பரிசாக வழங்கினார்.
சமீபத்தில் சென்னை தி.நகரில் பணியில் இருந்த தூய்மைப் பணியாளர் பத்மா, சாலையில் தங்க நகைகளுடன் கிடந்த பையை கண்டுள்ளார்.
அதனை பொறுப்பாக உரியவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைத்த அவர், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அதனைத் தொடர்ந்து பரமேஷ் (46) என்ற நபருடையதுதான் அந்த நகை என தெரிய வந்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தனியார் ஒப்பந்த பணியாளரான பத்மாவின் நேர்மையைப் பாராட்டி, அவருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதன்மூலம் தூய்மைப் பணியாளர் பத்மாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில், அவரை கௌரவிக்க புகைப்படத்துடன் சிறப்பு தபால் தலை வெளியானது.
தங்க சங்கிலி
இன்று நடிகர் ரஜினிகாந்த், பத்மாவை நேரில் அழைத்து பாராட்டியதுடன், தங்கச் சங்கிலியையும் ரஜினிகாந்த் பரிசளித்துள்ளார்.
இதுதொடர்பில் ரஜினிகாந்தின் பிஆர்ஓ, முன்களப் பணியாளரான பத்மாவின் செயலை அங்கீகரித்து, அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி அணிவித்து கவுரவித்துள்ளார் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
