‘சொன்னா கேளுங்க... இப்படி செய்யாதீங்க’ - ரசிகர்களை வன்மையாக கண்டித்த ரஜினி
ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்த ரஜினி ரசிகர்களின் செயலுக்கு அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இப்படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனிடையே ஏதோ ஒரு ஊரில் மோஷன் போஸ்டர் வெளியானதை கொண்டாடும் விதத்தில் ரஜினி கட் அவுட்டிற்கு ரசிகர்கள் ஆட்டை பலி கொடுத்து அதன் ரத்தத்தினால் அபிஷேகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.
தலைமை அறிவிப்பு. @rajinikanth#Annaatthe #Rajinikanth pic.twitter.com/qDVaz5EyUS
— Anisilance CJ (@imanish30) September 14, 2021
இதனையடுத்து இந்த வீடியோ தொடர்பாக வழக்கறிஞர் தமிழ் வேந்தன் மற்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி டிஜிபி அலுவலகத்தில் ரத்த அபிஷேகம் செய்தவர்கள் மீதும், ரசிகர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்காத நடிகர் ரஜினி மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தனர்.
இந்நிலையில் அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அண்ணாத்த திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி இரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது வன்மையாக கண்டிக்கதக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது. அருவருப்பான இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென்று அன்புடன் கேட்டு கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.