ரஜினிக்கு முதல் ரசிகர் மன்றம் தொடங்கிய நபர் மரணம் - கண்ணீரில் ரசிகர்கள்
ரஜினிக்கு முதல் ரசிகர் மன்ற தொடங்கிய ரசிகர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. ஆனால் சில ஊர்களில் உள்ள ரசிகர் மன்றங்கள் அவரது ரசிகர்களுக்கு ஸ்பெஷலானதாக அமையும்.
அந்த வகையில் ரஜினி நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள் வெளியான போது அவருக்கு மதுரையில் கவர்ச்சி வில்லன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற பெயரில் அப்போது 18 வயதாக இருந்த ஏ.பி.முத்துமணி ரசிகர் மன்றத்தை தொடங்கினார்.
தன் முதல் ரசிகர் மன்றம் என்பதால் ரஜினிக்கு மிகவும் நெருக்கமான, பிடித்தமான நபராக மாறினார் முத்துமணி. சென்னை சென்றால் ரஜினி வீட்டுக்குள் தடையில்லாமல் செல்லும் அளவுக்கு அவருக்கு செல்வாக்கு இருந்துள்ளது. மேலும் தாய், தந்தையை சிறுவயதிலேயே இழ்ந்த முத்துமணியின் திருமணம் ரஜினிகாந்த் வீட்டிலுள்ள பூஜை அறை முன்புதான் நடைபெற்றது. அப்போது தாலி உட்பட சீர்வரிசை பொருள்களை ரஜினி கொடுத்து அனுப்பினார்.
ஆனால் காலப்போக்கில் நடந்த உள்கட்சி அரசியலால் ரசிகர் மன்ற செயல்பாடுகளில் இருந்து விலகியிருந்த முத்துமணி 2020 ஆம் ஆண்டு கொரோனா சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அப்போது முத்துமணியுடன் போனில் உரையாடிய ரஜினி உடல்நிலையில் அக்கறை செலுத்துமாறு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து சமீபத்தில் மீண்டும் உடல்நலம் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று மரணமடைந்தார். இந்த தகவல் தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்ளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மேலும் முத்துமணியின் மேல் இருந்த அன்பால் தான் "முத்துமணிச்சுடரே வா.." என்ற பாடலையும், தன் படத்திற்கு முத்து என்ற தலைப்பையும் ரஜினி வைத்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.