திருப்பத்தூரில் பதுங்கி இருக்கிறாரா ராஜேந்திர பாலாஜி? - வெளியான பரபரப்பு தகவல்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் தொடர்பில் இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல பேரிடம் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக,
பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு போலீசார் நவ.15-ம் தேதி வழக்குப் பதிவு செய்து 8 தனிப் படைகள் அமைத்து போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் டிச.18-ம் தேதி முதல் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அவர் பற்றி இதுவரை எந்தவித தகவலும் கிடைக்காமல் தனிப்படை போலீஸார் திணறி வருகின்றனர்.
இதனிடையே விருதுநகர் போலீஸ் வட்டாரங்களில் ராஜேந்திரபாலாஜியின் மொபைல் போன் சிக்னலை தனிப் படை போலீசார் கடந்த 2 நாட்களாக தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
அதை தொடர்ந்து தனிப் படை போலீஸார் குறிப்பிட்ட பகுதியில் முகாமிட்டு அவரது நடவடிக்கைகளை நுணுக்கமாகக் கண்காணிக்கின்றனர்.
ஓரிரு நாட்களில் அவர் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதை தொடர்ந்து அவருக்கு உதவியதாக சில அ. தி.மு.க நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், ராஜேந்திரபாலாஜி வெளி மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கு தப்பித்து செல்லாமல் தடுக்க லுக் அவுட் நோட்டிஸ் விடப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் திருப்பத்தூரில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.