ஆன்மிக அரசியலில் ஈடுபடுவேன்- டி.ராஜேந்திரன் அறிவிப்பு
சொந்தமாக OTT தளத்தை உருவாக்கி புதிய தொடர்கள் மற்றும் சிறிய படங்களை வெளியிட திட்டமிட்டிருப்பதாக டி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் பிரபல இயக்குனர் டி.ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது - தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பின்னர் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிமுக அழைத்தார்கள்.
ஆனால் நான் கேட்கும் அளவிற்கு அவர்களால் சீட் வழங்க முடியாது என்பதால் இந்த தேர்தலில் இலட்சிய திமுக போட்டியிடவில்லை. தற்போது திரையரங்குகளில் கூட்டம் வராமல் இருப்பதாலும், உள்ளாட்சி வரி 8% இருக்கின்ற காரணத்தால் சிறிய திரைப்படங்கள் வெளியிட முடியாமல் உள்ளது. எனவே அந்த படங்களை வெளியிட புதிதாக நானே ஒரு OTT தளத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். விரைவில் அந்த புதிய OTT தளத்தை துவங்க உள்ளேன்.

மேலும் தற்போது நான் ஆன்மிகத்தை மிகவும் விரும்புகிறேன். அடுத்து நான் ஆன்மிக அரசியலில் மட்டுமே ஈடுபட விரும்புகிறேன். நான் ஆன்மீக அரசியல் விரும்புகிறேன் என்று கூறி அரசியலுக்கு வராமல் சென்ற அவருடன் என்னை ஒப்பிடுவது தவறு. நான் 1982ம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். மக்களுக்காக பல்வேறு போராட்ட களத்தில் இருக்கும் என்னை கலதிற்கே வராத நபருடன் ஒப்பிடுவது தவறு.
மேலும் இந்த தேர்தல் முடிந்தவுடன் பல்வேறு நபர்களின் கூடாரம் காலியாக மாறும். கருத்து கணிப்பு என்ற பெயரில் அவரவர் கருத்துகளை மக்கள் மத்தியில் தங்களின் கருத்துகளை திணித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.