கிரிக்கெட் தான் முக்கியம் கல்யாணத்தை தள்ளி போடுங்க - ஒரு நாள் ஹீரோ ரஜத் படிதார்..!
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்காக ரஜத் படிதார் தனது திருமணத்தை தள்ளி போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஐ.பி.எல் எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூரு அணி வீரர் ரஜத் படிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார்.
ஐ.பி.எல் போட்டியில் முதல் சதம் அடித்த பெங்களூரு அணி வீரர் என்ற பெருமையை பெற்றார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இவர் பெங்களூரு அணியில் சிசோடியா காயமடைந்தால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக ரூ.20 லட்சத்திற்கு ரஜத் படிதார் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
விராட் கோலி கூறுகையில், 'நான் எத்தனையோ சிறந்த இன்னிங்சை பார்த்து இருக்கிறேன். ஆனால் ரஜத் படிதாரின் இன்னிங்ஸ் ஏற்படுத்திய தாக்கம் போல் வேறு எதையும் உணர்ந்ததில்லை.
நெருக்கடியான சூழல், மிகப்பெரிய போட்டி, அதுவும் சர்வதேச போட்டியில் ஆடாத ஒரு வீரர் சதம் அடித்திருப்பது பிரமிப்பானது. சக வீரராக அவரை பாராட்டியாக வேண்டும்' என்றார்.
பெங்களூரு அணி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பேசுகையில்,ரஜத் படிதார் போன்ற ஒரு இளம் வீரர் இந்த நேரத்தில் சதம் அடிப்பது எளிதானது அல்ல. ஐ.பி.எல் போட்டியில் நான் பார்த்த சிறந்த செஞ்சுரியில் இதுவும் ஒன்று என்றார்.
இதனிடையே இந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்காக ரஜத் படிதார் தனது திருமணத்தை தள்ளி போட்டது தெரியவந்துள்ளது.
இது குறித்து அவரது தந்தை மனோகர் படிதார் கூறுகையில்,"ரஜத் படிதாருக்கு திருமணம் செய்து வைக்க ரத்லம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தேர்வு செய்திருந்தோம்.
படிதாரை ஐ.பி.எல் ஏலத்தில் யாரும் எடுக்காததால் மே 9-ந்தேதி திருமணத்தை நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டோம்.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை மட்டும் அழைத்து சிறிய விழாவாக திருமணத்தை நடத்திட இந்தூரில் உள்ள ஒரு ஓட்டலை பதிவு செய்திருந்தோம். ஆனால் அதற்குள் பெங்களூரு அணி அவரை ஒப்பந்தம் செய்ததால் திருமணத்தை தள்ளிவைத்து விட்டோம்.
ஐ.பி.எல். முடிந்ததும் ரஜத் படிதார் ரஞ்சி கிரிக்கெட்டில் மத்திய பிரதேச அணிக்காக விளையாட உள்ளார். இந்த போட்டி முடிந்ததும் அவரது திருமணம் நடைபெறும்" என்றார்.