பெங்களூருவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது ராஜஸ்தான்..!
பெங்களூரு அணியை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி.
இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியின் 2-வது தகுதிச் சுற்று போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
முதலில் பேட் செய்த பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
இதையடுத்து ராஜஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் பெங்களூரு அணி பேட்ஸ் மேன்களின் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிய தொடங்கியது.
கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்து, 58 ரன்னில் வெளியேறினார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 21 ரன் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜாஸ்பட்லர் 60 பந்துகளில் 10 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
18.1 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அந்த அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.