சாய்னாவுக்காக சித்தார்த்திடம் சண்டைக்கு சென்ற சுரேஷ் ரெய்னா - ரசிகர்கள் அதிர்ச்சி
சாய்னா நேவாலுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் சித்தார்த்துக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் மக்கள் போராட்டத்தால் பிரதமர் மோடியின் வாகனம் நிறுத்தப்பட்டது. இதனால் அவர் பாதியில் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. பிரதமர் மோடியின் நிகழ்ச்சி இப்படி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது நாடு முழுக்க கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நோவாலும் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். ஒரு நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் அந்த நாட்டை எப்படி பாதுகாப்பான நாடு என்று சொல்ல முடியும்.
பிரதமர் மீது தாக்குதல் நடத்தியவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என சாய்னா நேவால் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த ட்விட்டை ரீ ட்விட் செய்த பிரபல நடிகர் சித்தார்த் இரட்டை அர்த்தம் வரும்படி கிண்டல் செய்து இருந்தார். இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இந்திய மகளிர் ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்த பரிந்துரை விடுத்தது. இது தொடர்பாக தமிழ்நாடு போலீசுக்கு புகாரும் சென்றுள்ளது.
இந்நிலையில் சாய்னா நோவாலுக்கு ஆதரவாக பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார். அதில், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் வியர்வையையும், ரத்தத்தையும் இந்த நாட்டிற்காக கொடுக்கிறார்கள். சாய்னா போன்ற நமது நாட்டின் பெருமையாக திகழ கூடிய ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு எதிராக இப்படி தரக்குறைவான மொழியில் பேசியது வருத்தம் அளிக்கிறது. ஒரு இந்திய விளையாட்டு வீரராக எனக்கு இது கவலை அளிக்கிறது.
நான் இந்த வேளையில் சாய்னாவுடன் உறுதுணையாக நிற்கிறேன். இந்த அருவெறுக்கத்தக்க விமர்சனத்தை நான் கடுமையாக கண்டிக்கிறேன் என ரெய்னா தெரிவித்துள்ளார்.