தோனியால் தான் இந்திய அணியில் எனக்கு இடம் கிடைத்ததா? ரெய்னா கவலை
இந்திய கிரிக்கெட்டில் பல ஜோடிகள் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்து பல சாதனைகளைப் படைத்துள்ளன. அப்படி இந்திய கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத இரு வீரர்கள் தோனியும் ரெய்னாவும்.
இந்திய அணியில் தொடங்கிய இவர்களுடைய பார்ட்னர்ஷிப் ஐ.பி.எல் தொடரிலும் நீடித்தது. இது நாள் வரை இருவரும் சென்னை அணிக்காக விளையாடி வருகின்றனர்.
ஐ.பி.எல் வரலாற்றில் சென்னை தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்ததற்கு இருவரும் மிக முக்கியமான காரணம். அதே போல இந்திய அணியிலும் இருவரும் பல மறக்க முடியாத பார்ட்னர்ஷிப்களை வழங்கியுள்ளனர்.
ஆனால் தோனி கேப்டன் பதவியில் இருந்து இறங்கிய பிறகு இந்திய அணியில் ரெய்னாவும் முக்கியத்துவமும் குறைந்து போனது. இந்நிலையில் தன்னை தோனியுடன் இணைத்துப் பேசியது தனக்கு காயத்தை ஏற்படுத்தியதாக ரெய்னா மனம்திறந்து பேசியுள்ளார்.
அவருடைய வாழ்க்கை வரலாறு புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய ரெய்னா, “என்னுடைய கிரிக்கெட் கரியரில் தோனியின் பங்கு அளவிட முடியாதது.
ஆனால் தோனியுடன் நெருக்கமாக இருந்ததால் தான் எனக்கு இந்திய அணியில் இடம் கிடைத்ததாக ஒரு சிலர் பேசியது உண்டு. அது எனக்கு காயத்தை ஏற்படுத்தியிருந்தது. நாங்கள் இருவருமே இந்திய அணியில் எங்களுக்கான இடத்தைப் பிடிக்க உழைத்துள்ளோம்” என்றார்.