தமிழகத்தில் உள்ள 11 வழித்தடங்களில் தனியார் ரயில் விரைவில் இயக்கம்! ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!
தமிழகத்தில் உள்ள 11 வழித்தடங்களில் தனியார் ரயில் இயக்கப்படுவதற்கான பணிகள் நிறைவடையவுள்ளதால் தனியார் ரயில்கள் விரைவில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு செயல்படுத்த தொடங்கியது.
தனியார் ரயில்கள் இயக்கப்படுவதற்கான பணிகள் நிறைவடைய உள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதன் மூலம் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதற்காக 100 வழித்தடங்களை ரயில்வே வாரியம் தேர்வு செய்துள்ளது. இந்த வழித்தடங்களில் 150 தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 11 ரயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை-மதுரை, கோவை, திருச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மும்பை, மங்களூர், செகந்தராபாத், டெல்லி ஆகிய வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழித்தடங்களில் ரெயில்களை இயக்குவதற்காக 10 முன்னணி நிறுவனங்கள் முன் வந்துள்ளன. இந்த நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இந்த மாதம் டெண்டர் உறுதி செய்யப்பட்டு விடும் என ரயில்வே வாரிய தலைவர் சுனீத்ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. கட்டண நிர்ணயம் மற்றும் ரயில் நிலையங்கள் பராமரிப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த ரயில் நிலையங்கள் அருகில் நிலங்கள் ஒதுக்குவது ஆகிய பணிகள் நடந்து வருகின்றன.
மேலும், தனியார் ரயில்களின் தென்னக முனையமாக தாம்பரம் இருக்கும் என்றும் தண்டையார்பேட்டையில் ரயில் பராமரிப்புக்கான வார்டு ஒதுக்கப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.