ரயில் நிலைய பிளாட்பாரம் டிக்கெட் விலை மீண்டும் மாற்றம் - பொதுக்கள் மகிழ்ச்சி
சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களில் உயர்த்தப்பட்ட பிளாட்பாரம் டிக்கெட் விலை மீண்டும் பழைய விலைக்கு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக, மக்கள் அதிக அளவில் ரயில் நிலையத்தில் கூடாமல் இருக்கும் வகையில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டது.அதன்படி, ரூ.10ஆக இருந்த பிளாட்பாரம் டிக்கெட் விலை ரூ.50 ஆக உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, இந்த சர்ச்சைகளூக்கு ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது. அதில், சில ரயில் நிலையங்களில் மட்டுமே தற்காலிகமாக நடைமேடை அனுமதி சீட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட குறுகிய கால நடவடிக்கையான இது பல்லாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து சென்னை ரயில்வே கோட்டத்தில் உயர்த்தப்பட்ட பிளாட்பாரம் டிக்கெட் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.