ராகுல் காந்தி நாளை தமிழகம் வருகை - சூடுபிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்
கடந்த இரண்டு மாதங்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தென் மாநிலங்களில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த மூன்று மாநிலங்களுமே சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க இருக்கின்றன. ராகுல் காந்திதமிழகத்தில் ஏற்கெனவே அவர் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 2-வது கட்டமாக நாளை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். நாளை காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகே பொதுமக்களிடையே ராகுல் காந்தி பேசுகிறார்.
அதன்பிறகு கடற்கரை சாலை வழியாக முத்தையாபுரத்தை அடுத்த கோவங்காடு விலக்கு பகுதியில் உப்பள தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் அங்கிருந்து முக்கானி, ஆத்தூர், சாகுபுரம், குரும்பூர் வழியாக ஆழ்வார்திருநகரிக்கு வருகிறார். அங்கு காமராஜர் சிலை அருகே பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார்.
பின்னர் நாசரேத் வழியாக சாத்தான்குளத்துக்குச் செல்கிறார்.
அங்கு காமராஜர் சிலை அருகே பொதுமக்களிடம் உரையாற்றுகிறார். அதன்பிறகு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சென்று அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.