2-வது நாளாக பாதயாத்திரை - பயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி

Rahul Gandhi India
By Nandhini Sep 08, 2022 05:53 AM GMT
Report

2ம் நாளாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

ராகுல் காந்தியின் பாத யாத்திரை

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை தொடங்கியுள்ளார்.

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக, மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரை மூலம் ராகுல்காந்தி 3,570 கி.மீ. தூரத்தை நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அகில இந்திய நிர்வாகிகள், அந்தந்த மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் ராகுல்காந்தியுடன் செல்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.

இதற்காக நேற்று முன்தினம் இரவு டெல்லியிலிருந்து விமானம் மூலம் ராகுல்காந்தி சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் விடுதியில் தங்கினார்.

ராஜீவ் நினைவிடத்தில் 3 மாம்பழங்களை வைத்த ராகுல்காந்தி

நேற்று காலை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சென்ற ராகுல் காந்தி சுமார் 2 நிமிடம் நின்று, பின்னர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் நினைவிடத்திற்கு எதிரே இருந்த பகுதியில் அமைதியாக அமர்ந்து தியானம் செய்தார். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி 3 மாம்பழங்களை வைத்து வழிபாடு செய்தார்.

Rahul Gandhi

பாதயாத்திரையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

ராகுல்காந்தி பாதயாத்திரை இதற்கான தொடக்க விழா நேற்று மாலை கன்னியாகுமரியில் நடந்தது. கன்னியாகுமரியில் ராகுல் காந்தி - விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு திரும்பிய அவர், காந்தி மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட்டார். இந்த பாதயாத்திரையை தொடங்கி வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொண்டார். ராகுல்காந்தி தியானம் முடிந்த பிறகு தேசிய கொடியை கையில் கொடுத்து, பாதயாத்திரையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நேற்று பொதுக்கூட்டம் முடிந்ததும் கார் மூலமாக அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்துக்கு ராகுல்காந்தி சென்றார்.

அங்குள்ள 'கேரவனி'ல் ராகுல்காந்தி ஓய்வு எடுத்தார். அவருடன் பாதயாத்திரை சென்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளும் தனித்தனி 'கேரவன்'களில் தங்கினார்கள். இன்று முதல் தினமும் ராகுல்காந்தி 25 கி.மீ. தூரம் நடக்க உள்ளார்.

2-வது நாளாக ராகுல்காந்தி பயணம்

இந்த பாதயாத்திரை காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் பாதயாத்திரை 2 'ஷிப்டு'களாக நடைபெறுகிறது. 11-ந் தேதியிலிருந்து ராகுல்காந்தி கேரள மாநிலத்தில் பாதயாத்திரையை மேற்கொள்கிறார்.

இந்நிலையில், பாதயாத்திரையின் 2-வது நாளான இன்று அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்கியுள்ளார் ராகுல்காந்தி. அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்கும் முன் ராகுல்காந்தி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.