ராகுல்காந்தி மன்னிப்பு கேட்காவிட்டால் இதுதான் நிலைமை - கொந்தளித்த சாவர்க்கர் பேரன்!
ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்காவிட்டால் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்வதாக ரஞ்சித் சாவர்க்கர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவரின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த நாட்டிடமும் ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்திவருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித் சாவர்க்கர், ``உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் தனிப்பட்ட முறையில் சாவர்க்கர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கின்றனர். அதனால் அவர்கள், ராகுல் காந்தியிடம் மன்னிப்புக் கேட்க வலியுறுத்த வேண்டும்.
ரஞ்சித் சாவர்க்கர்
மேலும், உங்களின் கடவுளை அவமதிப்பவருடன் நீங்கள் இருக்கக் கூடாது என்பது பொதுவான ஒன்று. இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது, சாவர்க்கருக்கு எதிராக காங்கிரஸ் கடுமையான வார்த்தைகளைப் பேசியது.
அப்போது, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த காலங்களில் வழக்கும் பதிவுசெய்திருக்கிறேன். எனவே, சாவர்க்கர் குறித்து பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்காவிட்டால், அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்வேன்" என தெரிவித்துள்ளார்