தோனி வாழ்க்கைய மாத்தி போட்டது கங்குலின்னு நினைக்கிறீங்களா? - ரகசியம் சொல்லும் சேவாக்
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன், சிறந்த விக்கெட் கீப்பர், கேம் ஃபினிஷர் என்று எல்லாம் வர்ணிக்கப்படும் எம்.எஸ்.தோனியின் கிரிக்கெட் வாழ்க்கைப் பாதையை வழிவகுத்தது வேண்டுமானால் கங்குலி ஆக இருக்கலாம். ஆனால், அதை மாற்றி அமைத்தது வேறு ஒரு நபர்தான என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமான வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சேவாக் வெளியிட்டுள்ள செய்தியில் :
எம்.எஸ்.தோனியை முதன் முதலாக தேசிய அணியில் அறிமுகப்படுத்தியது சவுரவ் கங்குலி. 2005-ம் ஆண்டு முதன் முறையாக அணியில் அறிமுகம் ஆகிய தோனி தனக்கான இடத்தைப் பிடிப்பதற்கு ரொம்ப காலம் எடுத்துக்கொள்ளவில்லை.
2007- ஆண்டே இந்திய அணியின் கேப்டன் ஆக உயர்ந்துவிட்டார் தோனி. அதிரடி ஆட்டக்காரர் ஆக அறிமுகம் ஆன போதும் நாளுக்கு நாள் பொறுப்பும் பொறுமையும் அதிகம் உள்ளவராகவே வளர்ந்தார் தோனி.
.இன்று ஒரு Game Finisher ஆகக் கொண்டாடப்படும் தோனியின் கிரிக்கெட் பாதையை மாற்றி அமைத்தது ஒரு சம்பவம் என நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார் சேவாக்.
கிரிக்கெட் உலகில் தோனியை அறிமுகப்படுத்தியது தான் கங்குலி. ஆனால், இன்றைய தோனியை அன்று உருவாக்கியது ராகுல் டிராவிட் தான். 2006-07 சமயங்களில் தோனி- டிராவிட் இடையே நடந்த ஒரு சம்பவம் தான் இன்றைய தோனியின் நிலைக்குக் காரணம் என நான் நினைக்கிறேன்.
ஒரு முறை டிராவிட் அணியில் நாங்கள் இருந்த போது ஆட்டத்தை முடிக்கும் பொறுப்பை டிராவிட் தோனியிடம் கொடுத்திருந்தார். ஆனால், ஒரு மோசமான ஷாட் உடன் தோனி வெளியேறிவிட்டார். அதற்கு டிராவிட் தோனியை கடுமையாகத் திட்டிவிட்டார்.
அந்த சம்பவம் தோனி மேல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் தானே முன்வந்து பொறுப்பு எடுத்துக் கொண்டு ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாட ஆரம்பித்தார்.
யுவராஜ் உடன் மிகச்சிறந்த பார்டனர்ஷிப் அமைத்து சாதனைகளைப் படைத்தார் தோனி. அதே சமயம் கங்குலிக்கும் பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
2005-ம் ஆண்டுவாக்கில் கங்குலி அணியின் ஆர்டரை மாற்றி அமைத்து தொடக்க ஆட்டக்காரர் ஆக என்னை ( சேவாக்) இறக்கி அவருடைய இடத்தை தோனிக்கு கொடுத்தார். அதுதான் தோனியின் வளர்ச்சிக்கு ஒரு காரணம் ஆக அமைந்தது எனப் பேசியுள்ளார்.