இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளர் ஆகிறார் ராகுல் திராவிட்
டி20 உலகக் கோப்பை போட்டி முடிந்த அடுத்த 4 நாட்களில் நியூஸிலாந்து இந்தியாவில் பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் விளையாட உள்ளது.
ரவி சாஸ்திரி ஓய்வு பெற்றுவிட்டால் இந்திய அணிக்கு அந்த நேரத்தில் பயிற்சியாளர் இல்லாத சூழல் ஏற்படும். புதிய பயிற்சியாளர் வரும் வரை இந்திய அணிக்கு ராகுல் திராவிட் பயிற்சியாளராகச் செயல்பட பிசிசிஐ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் தென் ஆப்பிரிக்கப் பயணம் வரை திராவிட் பயிற்சியாளராக நீடிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத பிசிசிஐ நிர்வாகி ஒருவர் ஊடகம் ஒன்றில் தெரிவிக்கும் போது, “ இந்திய அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படும் வரை ராகுல் திராவிட் பயிற்சியாளராகத் தொடர அவரிடம் கேட்டுள்ளோம்.
குறைந்தபட்சம் தென் ஆப்பிரிக்கத் தொடர்வரை அவர் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம். முழுநேரப் பயிற்சியாளராகத் தொடர ராகுல் திராவிட்டுக்கு விருப்பமில்லை.
அவரின் குடும்பத்தாரைப் பிரிந்திருக்க நேரிடும் எனக் கருதுகிறார். ராகுல் திராவிட் எங்களின் கோரிக்கைக்குச் சம்மதிப்பார் என நம்புகிறோம். தென் ஆப்பிரிக்கத் தொடருக்குள் பயிற்சியாளர் பதவிக்கான சரியான நபர் தேர்வு செய்யப்படுவார்.
அதுவரை தற்காலிகமாக இந்திய அணிக்குப் பயிற்சியாளராகத் தொடர திராவிட்டிடம் கேட்டுக்கொண்டோம். தேவைப்பட்டால் திராவிட்டுக்கு உதவியாக என்சிஏ அலுவலர்கள் உதவுவார்கள்” எனத் தெரிவித்தார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி டி20 உலகக் கோப்பை முடிந்தபின் ஓய்வு பெறுகிறார். டி20 கேப்டன் பதவியிலிருந்தும் விராட் கோலி விலகுகிறார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாம் மூடி, தென் ஆப்பிரிக்காவின் லான்ஸ் க்ளூஸ்னர், ரிக்கி பாண்டிங் ஆகியோர் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் புதிய பயிற்சியாளரை முறையாகத் தேர்வு செய்யும் வரை ராகுல் திராவிட் இடைக்கால பயிற்சியாளராக பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
