பீரங்கிகளாலே தகர்க்க முடியாத தடுப்புச் சுவர் - ராகுல் டிராவிட் பிறந்தநாள் பதிவு
ஆகஸ்ட் 24, 2007. பிரிஸ்டோல் நகரில் இந்தியா, இங்கிலாந்து அணிகளின் மோதல். பிளின்டாபின் பௌன்ஸரில் 99 ரன்களில் வெளியேறுகிறார் சச்சின். வழக்கம்போல் எல்லோரும் மூட்அவுட். ஹாஸ்டலில் இதைப் பார்த்துக்கொண்டிருந்த பலரும் எழுந்து சென்றுவிட்டனர்.
சச்சின் அவுட் ஆனதும் வழக்கமாக நடப்பதுதானே எழுந்து போய்விடலாமா...?’ என்ற கேள்வி பலர் மனதில் கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் பெவிலியன் திரும்பிக்கொண்டிருக்கிறார்.
19-ம் நம்பர் ஜெர்சி, ராகுல் டிராவிட் கீப்பரின் கைநோக்கிச் செல்லும் பந்தை சடாரென்று அடிக்கும் அந்த லேட் கட், யார்க்கர் பந்தை அசால்டாக லெக் சைடில் செய்யும் ஃப்ளிக், அதற்கும் மேல் மார்பளவு எழுந்துவரும் பந்தை, பேக்ஃபூட் வைத்து, கால்களை உந்தி, க்ரீசுக்கு அருகிலேயே வைக்கும் அந்த ஸ்ட்ரோக். கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த கலைஞனை அன்று உலகம் கண்டது.
ஆம் கிரிக்கெட்டை நேசிப்பவனுக்கு டிராவிட்தானே பேரழகு! சச்சின் ஒரு ரன்னில் சதத்தைத் தவறவிட்டு வெளியேற, தன் கிரிக்கெட்டின் வாழ்வின் சிறந்த ஒருநாள் இன்னிங்ஸை ஆடினார் டிராவிட். வழக்கம்போல் Aerial ஷாட்கள் அதிகம் இல்லை.
ஆனால், 63 பந்துகளில் 92 ரன்கள். 11 பவுண்டரி, 1 சிக்ஸர்தான். ஓடி எடுத்த அந்த 43 ரன்களும்கூட கிரிக்கெட் பாடம் எடுத்தது. வழக்கமாக பந்துக்கும் குறைவாகவே ரன் எடுக்கும் டிராவிட், அன்று ஆடிய ஆட்டம் பலருக்கும் அதிர்ச்சி. உண்மையில் அழகும், அதிர்ச்சியும் நிறைந்ததுதானே டிராவிட்டின் ஆட்டம்.
வெஸ்ட் இண்டீஸுடனான போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் 22 பந்துகளில் அரைசதம் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தவரல்லவா அவர். ஆம், அவர் இந்த அணியின் சுவர் மட்டுமல்ல... அவரை ஒரு கோட்டை என்றும் சொல்லலாம்
. களத்தில் டிராவிட் நிலைத்து நின்றுவிட்டால், 12 பீரங்கிகளை ஒரே நேரத்தில் வெடிக்க வைத்தால்தான் அந்தக் கோட்டையைத் தகர்க்க முடியும்" என்றார் பௌலிங் ஜாம்பவான் ஷேன் வார்னே.
மொத்த அணியும் பெவிலியின் நோக்கி நடந்த போட்டிகளில், ஒற்றை ஆளாக நின்று போராடிய களங்கள் எத்தனை. ஸ்கோர்போர்டில் இந்தியா என்பதும் டிராவிட் என்பதும் ஒரேமாதிரி தெரியும். தாறுமாறாக ஸ்பின் ஆகட்டும், ஸ்விங் ஆகட்டும், பௌன்ஸ் ஆகட்டும், 160 கிலோமீட்டர் வேகத்தில் மார்பை நோக்கி வரட்டும்டிராவிட் தயங்கியதுமில்லை, தடுமாறியதுமில்லை.
ஒவ்வொரு பந்துக்கும் அவரிடம் பதிலுண்டு. சொல்லப்போனால் டிராவிட்டைப் போல் எவராலும் ஆடியதில்லை. ஏனெனில், அந்த ஷாட் ரன்னுக்கானது இல்லை, ரசிப்பதற்கானது. வலது காலை க்ரீசுக்குப் பின்னே பலமாக வைத்து, இடது காலை சற்று மடக்கி, உதடுகளை உள்ளே மடக்கிக்கொண்டு பந்தை அடித்துவிட்டு, அது போகும் திசையை அவர் பார்ப்பார். அது அவ்வுளவு அழகு மாயக் கரங்கள் கொண்ட ஓவியன் வரைவதெல்லாம் அழகாகத்தானே இருக்கும். ரசிப்பதைவிட, அவரிடம் கற்றுக்கொள்ள இருக்கும் விஷயங்கள் ஏராளம்.
'நீ நிற்கும் சூழல் எதுவாக இருந்தால் என்ன? உன் எதிரில் நிற்பவன் யாராக இருந்தால் என்ன? அவன் கையில் இருக்கும் ஆயுதம் எதுவாக இருந்தால் என்ன? உன் வெற்றியைத் தீர்மானிப்பது நீ மட்டுமே'
எந்த மைதானமாக இருக்கட்டும்... எந்த எதிரணியாக வேண்டுமானாலும் இருக்கட்டும்... எத்தனை விக்கெட்டுகள் வேண்டுமானாலும் வீழ்ந்திருக்கட்டும்...எந்த நெருக்கடியும் டிராவிட்டை வீழ்த்தியது இல்லை. அவை எதுவும் அவரது உறுதியை அசைத்துக்கூடப் பார்த்தது இல்லை.
நம் வாழ்வில் நாம் பார்ப்பதெல்லாம் ஆக்ரோஷம் கிடையாது. உண்மையான ஆக்ரோஷத்தைக் காணவேண்டுமென்றால் டிராவிட்டின் கண்களைப் பாருங்கள்" என்றார் மேத்யூ ஹெய்டன்.
அப்படி ஒரு தீ அந்தக் கண்களுக்குள் எரிந்துகொண்டிருக்கும். அதுதான் அவர் ஜாம்பவான் ஆகக் காரணம். என்அணிக்குத் தேவைப்பட்டபோதெல்லாம், திணறியபோதெல்லாம் ஆக்ஸிஜனாய் இருந்தவர் டிராவிட் அணிக்குத் தேவை என்று கண்ணாடியின்மேல் நடக்கச் சொன்னால், டிராவிட் நிச்சயம் அணிக்காக அதைச் செய்வார்" என்றொருமுறை புகழ்ந்தார் நவ்ஜோத் சிங் சித்து. அது புகழ்ச்சியில்லை. நிதர்சனம்.
கவாஸ்கர், சச்சின், கங்குலி, தோனி, கோலி என அளவு கடந்து கொண்டாடப்பட்ட வீரர்கள் அனைவரையும் மூர்க்கத்தனமாக வெறுத்தவர்களும் நம் நாட்டில் உண்டு. இவ்வளவு ஏன், கபில்தேவை விமர்சிப்பவர்களும் இங்குண்டு.
ஆனால், இவரை வெறுக்கும் ஆளை இதுவரை கண்டதில்லை. வெறுத்திட முடியுமா? அளவுகடந்த திறமை, ஏராளமான சாதனைகள், குறைவில்லாத வெற்றிகள், பொருள்... அனைத்தும் சம்பாதித்தவரின் கண்களில் திமிரோ, ஆணவமோ ஒருமுறைகூட எட்டிப் பார்த்ததில்லை. அவர் அரைசதம் அடித்தால், ஹெல்மெட்டின் உயரத்தைக் கூடத் தாண்டாத மாதிரிதான் பேட்டை உயர்த்துவார்.
அப்படியொரு மனிதனை யாரால் வெறுக்க முடியும்? “நான் இந்திய அணிக்காக 604 முறை விளையாடியுள்ளேன். அதில் 410 முறை அரைசதத்தைக் கடந்ததில்லை. வெற்றிகளைவிட, நான் சந்தித்த தோல்விகளே அதிகம். நான் வெற்றியாளன் என்பதைவிட, தோற்றவன்தான். அதனால், எனக்குத் தோல்விகள் பற்றிப் பேசத் தகுதி இருக்கிறது"
இந்திய அணியின் முன்னாள் கேப்டன், பலகோடி பேரின் ரோல் மாடல், கிரிக்கெட் வீரர்களே கொண்டாடும் ஜாம்பவான், பத்மபூஷண்... அவர் சொன்ன வார்த்தைகள் அவை. டிராவிட்டை மொத்த உலகமும் நேசிக்கக் காரணம் இதுதான். இந்தச் சுவரின் உயரம் எவரும் அடைய முடியாதது.