ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்படாமல் இருப்பதற்கு இதுதான் காரணமா? - உண்மையை உடைத்த ராகுல் டிராவிட்
ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு ஏன் வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை என தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் இரண்டையுமே கைப்பற்றி சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
நேற்று முந்தினம் பெற்ற வெற்றியின் மூலம் 6 வருடங்களுக்கு பிறகு ஐசிசி டி20 அணிகளின் பட்டியலில் நம்பர் 1 இடத்தை மீண்டும் இந்திய அணி பிடித்துள்ளது.
ஆனால் இந்த தொடர் இளம் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெயிக்வாடிற்கு மட்டும் சோதனையாக அமைந்தது.
நியூசிலாந்து தொடர், தென்னாப்பிரிக்க தொடர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் என தொடர்ந்து அவர் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்காமலேயே ஒதுக்கப்பட்டு வருகிறார்.
நேற்று முன்தினம் நடந்த 3-வது டி20 போட்டியில் விராட் கோலி விலகியதால் அந்த போட்டியில் மட்டும் ருதுராஜுக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அவரால் அந்த போட்ட்டியில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. 4 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். எனவே ஒரே ஒரு போட்டியை வைத்து மட்டும் இலங்கை தொடரில் ருதுராஜுக்கு வாய்ப்பு கிடைக்காது என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இது குறித்து மௌனம் கலைத்துள்ளார்.
“இது மிகவும் கடினமான ஃபார்மட் கிரிக்கெட் ஆகும். ருதுராஜ், ஆவேஷ் கான் யாராக இருந்தாலும், ஒரே ஒரு போட்டியை வைத்து நாங்கள் முடிவுக்கு வரமாட்டோம்.
ஒவ்வொரு வீரருக்கும் எந்தளவிற்கு அதிகப்படியான வாய்ப்புகள் கொடுக்கப்பட முடியுமோ, அந்த அளவிற்கு தந்து கொண்டிருக்கிறோம்.
ஏனென்றால் சில போட்டிகளில் தொடர்ந்து விளையாடினால் தான் அவர்களின் தன்மையை புரிந்துக்கொள்ள முடியும். ருதுராஜ் கெயிக்வாட்டின் சிறந்த ஆட்டம் காரணமாகவே அணிக்குள் இருக்கிறார்.
இல்லையென்றால் அணிக்குள்ளேயே சேர்க்கப்பட்டிருக்க மாட்டார். அதற்காக அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்பது கடினமான ஒன்றாகும்.
முடிந்தளவிற்கு அனைவருக்கும் நியாயமான முறையில் வாய்ப்புகள் கிடைக்கும்.” என தெரிவித்தார்.