வெறுப்பு அரசியல் இல்லை, மக்களுக்கு சேவை தான் நோக்கம் – ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வருவது குறித்து மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் அழைத்தால் மட்டுமே அரசியலுக்கு வருவேன் என்றும், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை உத்தண்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்த ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

பதவி மீது ஆசை இல்லை
தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறினார். தன் தாய் மற்றும் ரசிகர்களின் ஆதரவு இருப்பதாகவும், அரசியல் குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அரசியலில் வெறுப்பு அல்லது சண்டை நோக்கில் அல்லாமல் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் மட்டுமே வருவேன் என்றும், பணம் அல்லது பதவி மீது ஆசை இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், தவெக கட்சியின் செயல்பாடுகள் மற்றும் அரசியல் சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்த அவர், கட்சிக்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும், தற்போது நடைபெறும் சில மாற்றங்களை நேர்மறையாக பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.
ரஜினிகாந்த் தனது முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், அனைத்து அரசியல் தலைவர்களையும் மதிப்புடன் பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் எதிர்காலம் குறித்த தெளிவான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.