”மோடி, அமித் ஷா அறிவாளிகள்.. கமல் திமுகவின் பீ டீம்” - ராதாரவி விளாசல்
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் பாஜக போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே மீதம் உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் நடிகர் கமல்ஹாசனை எதிர்த்து பாஜகவின் வானதி சீனிவாசனைன் போட்டியிடுகிறார்.
இதனால் கொங்கு மண்டலத்தில் கோவை தெற்கு தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து நடிகர் ராதாரவி அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “கமல் திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூறி, அதிமுக ஓட்டை பிரிக்க பார்க்கிறார். அவர் திமுகவின் கைக்கூலி, பாஜகவின் ஓட்டு வங்கியை பிரிக்க திமுகவின் பீ டீமாக களமிறக்கப்பட்டவர்தான் கமலஹாசன்.
அவரை பார்த்து பயப்பட வேண்டாம். இந்த தேர்தலில் வானதி சீனிவாசன் நிச்சயமாக வெற்றி பெறுவார். கம்யூனிஸ்டுகள் பல காரணங்களுக்காக திமுக கூட்டணியில் இருக்கும். வரும் சட்டசபை தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும்” என்றார். மேலும் அவர் கூறுகையில், ”மோடியும் அமித்ஷாவும் மிகப் பெரிய அறிவாளிகள். ஆனால் மிகவும் சாதாரணமானவர்கள்.
வாழ்வில் பல விஷயங்களை கற்றுத் தேர்ந்தவர்கள். நம் நாட்டின் வளர்ச்சிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் 24 மணி நேரமும் உழைப்பவர்கள். குடியுரிமை திருத்த சட்டம் நாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்று. அச்சட்டம் அமல்படுத்தப்பட்டால் தான் நமது மண்ணில் இருக்கும் அந்நியர்களை இனம் கண்டுகொள்ள முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.