டோக்கியோ ஒலிம்பிக்கில் வெடித்த பிரச்சனை...பகிரங்க மன்னிப்பு கேட்ட அதிகாரி...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் போது விளையாட்டு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்த வார்த்தை ஒன்று பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ரசிகர்கள் இன்றி மிகுந்த பாதுகாப்போடு நடைபெற்று வருகின்றன. அங்கு ஏற்கனவே கொரோனா, ஊக்க மருந்து சர்ச்சை என பல்வேறு பிரச்னைகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இனப்பாகுபாடும் காட்டப்படும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
ஒலிம்பிக் தொடரில் சமீபத்தில் ஆண்களுக்கான சைக்கிளிங் போட்டி நடைபெற்றது. டைம் ட்ரையல் பிரிவாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திச்செல்ல முயன்றனர். அப்போது ஜெர்மனி நாட்டை சேர்ந்த நிகியாஸ் என்ற வீரர், அல்கெரியா மற்றும் எரிட்ரியா நாடுகளை சேர்ந்த வீரர்களை முந்திச்செல்ல கடுமையாக முயன்றுவந்தார்.
அப்போது அங்கிருந்த ஜெர்மனி நாட்டு சைக்ளிங் அமைப்பின் இயக்குநர் பாட்ரிக் மாஸ்டர் கருத்து ஒன்றை தெரிவித்தார். அதாவது சீக்கிரம் போ, அந்த ஒட்டகம் மேய்க்கும் பசங்கள பிடி, சீக்கிரம் போ' எனக்கூச்சலிட்டார். விளையாட்டு வீரர்களை ஒட்டகம் மேய்ப்பவர்கள் என அநாகரீகமாக கூறிய அந்த ஆடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்க,சம்பந்தப்பட்ட நபர் ஜெர்மன் நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிரங்கமாக மன்னிப்பை கேட்டார்.
மேலும் தனக்கு கடும் அழுத்தங்கள் இருந்த நேரத்தில் அநாகரீகமான வார்த்தைகள் தெரியாமல் வந்துவிட்டதாகவும், யாரையும் காயப்படுத்த நான் அப்படி கூறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.