உப்பை தின்னவன் தண்ணீர் குடிப்பான்; தப்பு செய்தவன் தண்டனைப் பெறுவான் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
அரசியல் ரீதியாக எவரையும் பழிவாங்கும் நோக்கம் திமுக அரசிற்கு கிடையாது.உப்பைத் தின்னவன் தண்ணீர் குடிப்பான்; தப்பு செய்தவன் தண்டனைப் பெறுவான்" என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்," கடந்த கால ஆட்சியில் நடந்த தவறுகளைச் சரி செய்ய வேண்டியதே தமிழக முதல்வர்க்கும், இன்றைய அமைச்சர்களுக்கும் பெரிய சவாலானப் பணியாக உள்ளது. திமுக அரசிற்கு யாரையும் பழி வாங்கும் நோக்கம் கிடையாது".
திமுக ஆட்சியும் அரசும் தொழிலாளர்களுடையது. கொரோனா இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டு, தற்போதுதான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கொரோனா தடைக் காலம் முற்றிலும் நீங்கியப் பிறகு, முதலமைச்சரின் மேலான வழிகாட்டுதசோடு, அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசி, போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு சுமூக முடிவுகள் எட்டப்பட்டு, தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில், நியாயமான அறிவிப்புகள் வெளியாகும்.
ஜெர்மன் கடன் நிதியுதவியுடன் கிட்டத்தட்ட 2000 டீசல் பேருந்துகளும், 500 எலக்ட்ரிக் பேருந்துகளும் முதலமைச்சரின் அனுமதியோடு விரைவில் வாங்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு பேருந்துகளில் சிறப்பு வசதிகளும் ஏற்படுத்தப் பட உள்ளது.
பெண்களின் இலவசப் பயணம் எதிர்ப்பார்த்த 40 சதவீதத்தை விட அதிகரித்து, மொத்தப் பயணிகளில் 60 சதவீதமாக பெண்களின் இலவச பயணம் உள்ளது. செல்வாக்கு மிக்க இந்த மகளிர் இலவசப் பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
கடந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் நிறைய குளறுபடிகள் உள்ளன. இந்த ஆட்சியில் அவற்றை சீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளதால் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். அரசியல் ரீதியாக எவரையும் பழிவாங்கும் நோக்கம் திமுக அரசிற்கு கிடையாது.
உப்பைத் தின்னவன் தண்ணீர் குடிப்பான்; தப்பு செய்தவன் தண்டனைப் பெறுவான்", என அவர் தெரிவித்தார்.