23 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கடனை திருப்பிக்கொடுத்த பிரபல நடிகை - பார்த்திபன் நெகிழ்ச்சி பதிவு...!
23 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கடனை திருப்பிக்கொடுத்த பிரபல நடிகையை பார்ந்து நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் பார்த்திபன்
தமிழ் திரையுலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். கடந்த 2019-ம் ஆண்டு இவர் இயக்கிய ‘ஒத்த செருப்பு அளவு 7’ படம் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்து தேசிய விருதை பெற்று சாதனை படைத்தது.
இரவின் நிழல்
வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் நடிகர் பார்த்திபன் சமீபத்தில் ‘இரவின் நிழல்’ என்ற படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்து வெளியிட்டார். இப்படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், ரேகா நாயர், ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
கடனை திருப்பிக் கொடுத்த நடிகை
இந்நிலையில், நடிகர் பார்த்திபன் ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார். அந்த பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது பிரபல நடிகையான மும்தாஜ், பார்த்திபனிடம் வாங்கிய கடனை சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்துள்ளாராம்.
நடிகை மும்தாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், நான் பிரபலமாக இல்லாத போது சரியான நேரத்தில் எனக்கு உதவி செய்த உங்களுக்கு நன்றி.
பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணம் நல்லதாக இருந்தாலும், நான் காலப்போக்கில் மறந்துவிட்டேன்.
பார்த்திபன் சார், இந்த சினிமாத் துறையில் நான் கண்ட மிகச் சில கண்ணியமான மனிதர்களில் நீங்களும் ஒருவர். உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் தர வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
பார்த்திபன் நெகிழ்ச்சி பதிவு
மும்தாஜின் இந்த பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் பார்த்திபன் ஷேர் செய்தார்.
இது குறித்து பார்த்திபன் குறிப்பிடுகையில்,
திருப்பித் தருவது-திருப்தி தருவது என்பதை உணர்த்தியவரின் இப்பதிவில் ‘நாளை’ என்பதன் தத்துவத்தை உணர்த்துகிறார்.
தொடர்ந்தால் யாவும் … ஒருவேளை முடிந்தால் சாவும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதை ஆழமாக சொல்கிறார்.
மனிதர்களை நேசிப்பதோடு வாசிக்கவும் செய்பவன் நான் என்பதால் எனக்கு தெரிவதை/தெளிவதை யாவருக்கும் சொல்ல விரும்புகிறேன்!
தினமும் ஒரு நல்ல காரியம் செய்ய முயற்சிக்கிறேன். இன்றும் செய்தேன். அதையெல்லாம் நான் வெளியில் சொல்வதில்லை.
அவையாவும் என் அகத்தின் பெருமையேத் தவிற, தற்பெருமையோ தம்பட்டமோ அல்ல.
அப்படியிருக்க இதை வெளிபடுத்த காரணம் இதில் நான்/நாம் கற்றுக்கொள்ளும் மனித வாழ்வின் உன்னதமே!!! என பதிவிட்டுள்ளார்.
பார்த்திபனின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் உங்களை நினைத்து பெருமையாக உள்ளது என பாராட்டி வருகின்றனர்.