உக்ரைன் தான் பேச்சு வார்த்தைக்கு மறுக்கிறது - ரஷிய அதிபர் பதில்!
உக்ரைன் நாடு பேச்சு வார்த்தைக்கு மறுப்பதாக ரஷிய அதிபர் கூறியுள்ளார்.
போர்
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் கடந்த 1½ ஆண்டாக நீடித்து கொண்டிருக்கிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர தென் ஆப்பிரிக்கா, எகிப்து, செனகல், காங்கோ-பிராசாவில்லி, கொமுமா ரோஸ், ஜாம்பியா, உகாண்டா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை கொண்ட ஆப்பிரிக்க குழு,
தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா தலைமையில் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரிஸ் ரமபோசா, அங்கு ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார்.
தென் ஆப்பிரிக்க அதிபர்
இதனை தொடர்ந்து, அதிபரான சிரில் ராமபோசா கூறுகையில், "போரை என்றென்றும் தொடர முடியாது. அனைத்து போர்களும் தீர்க்கப்பட்டு ஒரு கட்டத்தில் முடிவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று மிகத் தெளிவாக செய்தியை தெரிவிக்க இங்கு வந்துள்ளோம்.
இந்த போரால் ஆப்பிரிக்க கண்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளும் பாதிப்பு அடைந்துள்ளன. போரால் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கூறினார்.
அதற்கு பதிலளித்த புதின், "உக்ரைன் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு மறுத்து வருகிறது. குழந்தைகள் புனிதமானவர்கள். அவர்களை மோதல் மண்டலத்திலிருந்து வெளியேற்றினோம். அவர்களின் உயிரையும், ஆரோக்கியத்தையும் காப்பாற்றினோம்" என்று கூறினார்.